Saturday 4 August 2012

இருத்தலியல்-II

       இருத்தலியல் மனித அவலம்/மனிதத் துயரம் பற்றி முதன்மையாகப் பேசுகிறது.மனிதன் தன துயரத்திலிருந்து ,வேதனையிலிருந்து வீழ்ச்சியிலிருந்து விடுபட வழி தெரியாதவனாக இருக்கிறான் .மனிதன் தானே உருவாக்கிக் கொண்ட சூழலுக்குள் மாட்டிக் கொண்டான் .தனக்குள் தானே அன்னியமாகி போனான் தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் மேலும் அதிகமான வீழ்ச்சிக்கு உள்ளாகிறான் .இவனுக்கு சுதந்திரம் இல்லை. இவன் அசலான மனிதன் அல்ல. பொருளும் அதிகாரமும் இவனுக்குள் இடம் பிடித்துக் கொண்டன .இயற்கையோடும் மனிதர்களோடும் இவனுக்கு இயல்பான உறவு இல்லை .தன வாழ்வுக்கான நெறிகளை -வாய்ப்புகளை தீர்மானித்துக் கொள்ளும் திறனற்றவனாக  இருக்கிறான். இவன் தன வேர்களை இழந்து விட்டான் . இவன தனக்காக இல்லை.இவன் வாழ்க்கையை பிறர் அபகரித்து கொண்டனர் .பிறர் இவனுக்குள் வாழ்கிறார்கள் இவ்வாறு இருத்தலியல் மனிதனின் இருத்தலியல் அவலத்தை சொல்கிறது .இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இரண்டு உலக போர்கள் மனிதனின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன .குறிப்பாக மேற்கத்திய மனிதனின் வாழ்க்கையை இவை மிக கடுமையாக பாதித்தன .ஜெர்மனியில் ஏற்பட்ட நாசிசமும் ,சோவியத் யூனியனில் ஏற்பட்ட கம்யுனிசமும் மனிதன் மீது அதிகாரத்தை அடக்கு முறையை பெருமளவு திணித்தன .இறந்சு நூற்றாண்டுகளாக வலுப்பெற்று வரும் தொழில் முறை ,முதலாளியப் போக்கு ,இவனை இயந்திரத்தின் பகுதியாக்கி விட்டன .தொடர்ந்து பெருகிவரும் வணிக கலாச்சாரம் இவனை வெறும் நுகர்பவனாக மாற்றின .இவனது புலன்களின் வேட்கையை தூண்டி இவன் முன் பொருட்களை குவித்து அவற்றை நோக்கி இவன் ஆசைகளை தூண்டி இவற்றின் மூலம்   வணிக கலாச்சாரம்  இவனை சிறை பிடித்தது .தனக்குள் சிதைந்து போன இந்த மனிதன் கடுமையான மனநோய்களுக்கு ஆட்பட்டான் .காமத்திலிருந்து இவனுக்கு விடுதலை இல்லை என்று இவனுக்கு உளவியல் சொல்லியது .சில   நூற்றாண்டுகளாக  வளர்ந்து வந்த விஞ்ஞானம் ,முதலில் அண்டத்துக்கு வெளியில் கடவுளைத் துரத்தியது .பின்னர் கடவுள் செத்து விட்டான் என்று அறிவித்தது .அறிவின் ஆட்சி மனிதனை விடுவிக்கும் என்று விஞ்ஞானம் கூறியது .உண்மையாகவில்லை .அரசு அதிகாரம் ஏகாதிபத்தியமாக உருவெடுத்து போர்களை உருவாக்கி ராணுவத்தை பெருக்கி கோடிக்கணக்கான மனிதர்களை அழித்தது.தொழிற்புரட்சியின் மூலம் உருவாகும் என நம்பிய மறுமலர்ச்சியும் ஒளியும் மனிதனுக்கு கிட்டவில்லை . மாறாக இவன் வாழ்வுக்குள் இருள் வந்து நிறைந்தது .இத்தகைய இருபதாம்   நூற்றாண்டு சூழல் தான் இருத்தலியல் என்ற மெய்யியலை முன்னுக்கு கொண்டு வந்தது ,அறிவின் அடக்கு முறைக்கு உள்ளாகியிருந்த மனிதனின் உள்ளுணர்வு -அதர்க்கம் விழித்துக் கொண்டது அறிவின் மூலம் மனிதனுக்கு விடுதலை இல்லை என்று இருத்தலியல் அறிவித்தது .மனிதன் மீண்டும் தன் அடிப்படைகளை நோக்கி திரும்ப வேண்டும் என்று இருத்தலியல் கூறியது .பழங்கால கிரேக்க சமூகத்தில் மனிதனும் இயற்கையும் பிரிவு படதா அறிவும் உணர்வும் பிரிவுபடாத சமூகச் சூழலை இருத்தலியல் மீண்டும் மனிதனுக்கு நினைவு படுத்தியது .ஏசுவை பற்றி மீண்டும் பேசியது
              வாழ்க்கையிலிருந்து எவையெல்லாம் பிரிக்கபட்டனவோ அவற்றையெல்லாம் மீண்டும் வாழ்க்கைக்குள் இணைக்க வேண்டும் பொருட்களுக்குள் சிறைபட்டவனை விடுவிக்க வேண்டும் .மனிதனை இயல்பாக மாற்ற வேண்டும் .மனிதன் வேறு எதற்கும் தன்னை இழந்து விடக்கூடாது .எதன் ஒட்டுறவிலும் தன்னைக் காணக்கூடாது .தன்னைத் தானாக தரிசனம் கொள்ள வேண்டும் . எல்லாச் சமயத்திலும் இது சாத்தியமில்லை .கடுமையான நோய், அதிர்ச்சி மரணத்தை எதிர்கொள்ளும் தருணம் ஆகிய சந்தர்பங்களில் தன் உணர்வுகள் உச்ச அளவில் தீவிரம் கொள்ளும்போது தன்னை பற்றி தான் செய்யவேண்டிய தேர்வு பற்றி தன் சுதந்திரம் பற்றி புரிதல் பெற முடியும் .மனிதன் தனக்குள் காணும் மன சிதைவு என்பது ஒரு நோய் அல்ல. தன்னைப்பற்றிய ஒரு தேடல் .தேடலின் ஒரு தொடக்கம் தொடர்ந்து தேடும்பொழுது தன்னை உருவாக்கி கொள்ள முடியும் .தன் சூழல்களை தன்னை சிறைபடுத்தியிருக்கும் சக்திகளை மனிதன் கடக்க முடியும் .தனக்குள் கடவுளைக் கண்டுகொள்ள முடியும் 

Wednesday 27 June 2012

இருத்தலியல் ஒரு சிறிய அறிமுகம்

இருத்தலியல்  என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் தேடும்பொழுது  காமுவின் தி மித் ஆப் சிசிபஸ் என்ற ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது .சிசிபஸ் என்பவன் ஒரு கிரேக்க வீரன் .அவன் செய்த தவறுக்காக தெய்வங்கள் அவனுக்கு ஒரு தண்டனை விதிக்கின்றன .என்ன தண்டனை ? ஒரு பெரிய கல் உருண்டையை அருகிலிருக்கும் மலைச்சிகரம் நோக்கி அதை அவன் உருட்டிக் கொண்டே மேலே செல்ல வேண்டும் .உச்சியை அடைந்த உடன் அந்த கல் உருண்டையை விட்டு விட வேண்டும் .கல் உருண்டை கிழே மலை அடிவாரத்திற்கு போய்ச்சேரும் திரும்பவும் அவன் கிழே வந்து மீண்டும் அக்கல்உருண்டையை சிகரம் நோக்கித் உருட்டி செல்ல வேண்டும் ..உச்சியிலிருந்து பாறை கிழே உருண்டு வரும் .இப்படியே அவன் செய்து கொண்டே இருக்க வேண்டும் இது அவனுக்கு விதிக்க பட்ட தண்டனை .
   கிரேக்க புராணத்தில் இப்படி ஒரு கதை.இக்கதைக்கு என்ன பொருள் ? சிசிபசுக்கும் நமக்கும் ஏதேனும் உறவு இருக்கிறதா ? இருக்கிறது என்கிறது இக்கதை .ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்கிறோம்? காலையில் எழுகிறோம்.காலைகடன்களை முடித்து கொண்டு சிற்றுண்டி அருந்தி அலுவலகம் செல்கிறோம் .அங்கு நமக்குத் தரப்படும் அலுவலை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்புகிறோம் .இரவு உணவுக்கு பிறகு உறக்கம் மீண்டும் காலையில் எழுந்து அதே வேலையை செய்கிறோம்.யாரோ  நமக்கு கொடுத்த வேலை .யாருடைய தேவையோ நாம் நிறைவேற்றுகிறோம் . இதற்காக நமக்கு ஊதியம். ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறோம். அலுப்பு ஏற்படுகிறது .நொந்து கொள்கிறோம். வேறு வழியில்லை . குழந்தைக்காக குடும்பத்திற்காக உழைத்தாக வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை சுழற்சிக்குள் நாம் அடைப்பட்டுக் கிடக்கிறோம் தப்ப முடியாது .
  இதுதான் நமக்கு விதி என்றால் நம் குழந்தைகளுக்கு நாம் வைத்திருக்கும் விதி என்ன? அவர்கள் படிக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும் .அடுத்தவனுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும். அதற்க்கான கூலியை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம் திருமணம் .குழந்தைகள் பிறக்கின்றன .அவற்றுக்காக உழைக்க வேண்டும். குழந்தைகளுக்கும் இதே போன்ற வாழ்க்கை .மனைவிக்கு மட்டும் வேறு என்ன விதி .குடும்பத்திற்குள்ளும் இதே சுழற்சி. குழந்தை பேறு ,படிப்பு ,எவருக்காகவோ சம்பாதித்து கொடுப்பதற்காக படிப்பு .மூளையில் கலவியை/கணக்கை  திணித்து கொள்ள வேண்டும் .அது நமக்குள் செரிக்கிறதா ? இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை .கூலி வேலை செய்ய கல்வி கூலி அதிகம் வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகமான உழைப்பு இதற்காக பள்ளிகள் ,கல்லூரிகள் பாடத்திட்டங்கள் ,ஆசிரியர்கள்,அதிகார நிறுவனங்கள் காலங்காலமாக இவையெல்லாம் யாரோ வகுத்த வட்டத்திற்குள் சுற்றி வருகிறோம் .ஓடுகிறோம் ,கலைத்து போகிறோம் சீக்கிரம் சாவு வந்தால் நல்லது .
 சிசிபசுக்கு எதற்காகவோ யாரோ தண்டனை விதித்தார்கள் நமக்கும் இதே போல ஒரு தண்டனை யார் விதித்தார்கள் ,இதில் என்ன மகிழ்ச்சி இதிலிருந்து விடுதலைக்கு வழி உண்டா? இந்த சுழற்சியிலிருந்து கிடைக்கிற விடுதலை எப்படி இருக்கும் ? விடுதலை பற்றி நமக்கு ஏதேனும் கனவு உண்டா ? எதற்காக இந்த வாழ்க்கை ? இந்த வாழ்வுக்கு அர்த்தம் உண்டா? கடவுள் நமக்கு இப்படி வழி செய்தாரா? இப்படி விதித்தவர் கடவுளாக இருக்க முடியுமா ? சுழல் ஓட்டத்தின் வழியே கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் .இப்படி விதித்தவர் கடவுள் இல்லை என்றால் விதித்தது சாத்தானா? சாத்தானும் கடவுளும் வேறு வேறா ? இல்லை ஒன்றா ? காலங்காலமாக இந்த வாழ்வில் என்ன தான் நடக்கிறது ,வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையா? வாழ்கையே ஒரு அபத்தம் உயிரோடு இருக்கும் வரை இந்த அபத்தத்தை சகித்து கொள்வது இந்த அபத்ததிலிருந்து சாவு தான் நம்மை விடுவிக்கும் என்றால் சாவு விரைவில் வரட்டும் .
  வாழ்வின் அர்த்தம் நமக்குத் தெரியாத போது நாம் ஏன் குழந்தைகளை ஓயாமல் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் இதற்காக குடும்பம் மனைவி சம்பாத்தியம் அலுவலகம் நிறுவனம் எதற்கேனும் அர்த்தம் உண்டா ? அர்த்தமற்ற இந்த சுழற்சியிலிருந்து இவற்றின் மூலம் நமக்கு விடுதலை உண்டா ?
    இருத்தலியல் நம் வாழ்க்கை பற்றி இப்படி ஒரு கேள்வியை  முன்வைக்கிறது  .மேற்குலகில் இரண்டு உலகப்போர்கள் மாபெரும் அழிவை ஏற்படுத்த்தின கோடிகணக்கான மனிதர்கள், குழந்தைகள் பெண்கள் கொல்லப்பட்டார்கள் .இக்கடுமையான சூழலில் இருந்துதான் இருத்தலியல் என்ற தத்துவம் வெளிப்பட்டது இத்தனை பெரிய பேரழிவுகளுக்கு என்னதான் அர்த்தம் ,கடவுள் என ஒருவர் இருந்தால் இவை நடைபெற்று இருக்குமா ? இத்தகைய கேள்வியிலிருந்து மேலும் எத்தனையோ கேள்விகள் ,கடவுள் தான் உலகைப்படைத்தாரா  உயிர்களைப் படைத்தாரா ? இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் கடவுளின் படைப்பு தானா ? கடவுள் என ஒருவர் இருந்தால் கோடிகணக்கானவர்கள் இப்படி சாவார்கள் என்றால் பிரபஞ்சத்தை அவர் எப்படி படைத்திருக்க முடியம் ? அறிவியல் ஆய்வுகள் தெளிவாக சொல்கின்றன .பிரபஞ்சம் படைக்கப்படவில்லை .ஒரு மாபெரும் வெடிப்பு அதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது .தோன்றிய பிரபஞ்சம் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது .இதே பிரபஞ்சம் எத்தனையோ லட்சம் கோடி ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுருங்கி மேலும் சுருங்கி ஒரு மாபெரும் கருந்துளையாகும் .பிறகு அது மீண்டும் வெடிக்கும் பிரபஞ்சமாக விரிவடையும் .இது ஒரு ஓயாத இயக்கம் .கடவுள் இதை படைக்கவில்லை .படைத்திருக்க முடியாது .படைக்கவும் முடியாது. கடவுள் படைத்தார் என்ற ஒரு கதையை வைத்தே சமயங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ..சாமியார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .கோவில்கள் ,உருவங்கள்,சாத்திரங்கள் எல்லாமே இந்த அபத்ததிலிருந்தே தோன்றின .சமயங்கள் நம் வாழ்கையை அடைத்து கொள்கின்றன சாமியார்கள் நம்மை அடைத்துக் கொள்கிறார்கள்.
   இருத்தலியல் தத்துவம் பற்றி மேற்குலகில் எத்தனையோ விளக்கங்கள் ,எத்தனையோ அறிஞர்கள் வண்டி வண்டியாக நூல்கள் எழுதப் பட்டுள்ளன . தமிழிலும் சில நூல்கள் கிடைக்கின்றன. படித்துப் பார்க்கலாம் .குறிப்பாக எஸ் .வி. ராஜதுரை எழுதிய நூல்கள்
    ஓயாமல் இயங்கும் பிரபஞ்சத்தின் இயக்கத்திலிருந்து அண்டங்கள் பால்வெளி மண்டலம் இதற்குள் நம் சூரியன் சூரியனை சுற்றி பல கோள்கள் .இவற்றில் ஒன்று நம் உலகம் இதிலிருந்து இயற்கை ,தாவரங்கள் ஊர் வகைகள் பரிணாமம்  இறுதியாக மனிதன் .இவையனைத்துமே பரிணாமம் என்ற ஒன்றிலிருந்து இன்னொன்று அதிலிருந்து இன்னொன்று இப்படியே தோன்றின .மாறின / நுட்பங்கள் கூடின இதிலிருந்து உயிரியக்கம் எல்லாமே தற்செயல் யாரும் உள்ளிருந்து அல்லது வெளியிலிருந்து தோற்றுவிக்கவில்லை /படைக்கவில்லை
   பிரபஞ்சத்தை கடவுள் தான் தோற்றுவித்தார் என்றால் அவர் என்ன நோக்கத்தோடு படைத்தார் .இத்தனை பிரமாண்டமான பிரபஞ்சத்தை ஏன் படைக்க வேண்டும் .இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு புள்ளி கூட இல்லை .அதனினும் மிக மிக சிறிய ஓர் உயிர். இவனுக்காகவே இந்த மாபெரும் பிரபஞ்ச படைப்பு. கடவுள் செய்தது அபத்தம் அவர் என்ன திட்டத்தை வைத்து இவற்றையெல்லாம் செய்தார் .கடவுள் ஏதோ ஒரு நோக்கத்திற்காக மனிதனை படைத்தார் என்று சமயம் கூறுகிறது .குறிப்பிட்ட இந்த சமயத்தை படைத்த ஒரு சமயவாதிக்கு கடவுளின் நோக்கம் எப்படி புலப்பட்டிருக்க முடியும் .புலப்பட்டது என்று சொல்வது ஒரு கதையின்றி  வேறென்ன இப்படி எத்தனையோ விவாதங்கள் ,கடவுள் தான் எல்லாவற்றையும் படைத்தார் என்றாலும் எத்தனையோ பிரச்சனைகள் எத்தனையோ சிக்கல்கள் இவற்றையெல்லாம் சமயவாதிகள் விளக்க முடியாது .உலகப்போரை ,சுனாமியை ,எரிமலைகளை ,மாபெரும் வெள்ளத்தை ,புயல் காற்றை ,கொள்ளை நோய்களை அணுகுண்டு  வெடிப்பை ,கடைசியாக ஈழப்போரை,நித்தியானந்தரை இவர்கள் விளக்க முடியாது .கதைகள் சொல்லிக் கொண்டே காலம் தள்ளுகிறார்கள் .அரசியல் வாதிகளை போல இவர்களும் பொய்களில் புழுத்துக் கொண்டிருகிறார்கள்
   வாழ்க்கை அபத்தம் என்றால் நாம் செய்ய வேண்டியது என்பதற்கு இருத்தலியல் சொல்லும் ஒரு வழி தற்கொலை .தற்கொலை புனிதமானது .இன்னொரு வழி வாழ்க்கை ஒரு அபத்தம் .வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றாலும் அர்த்தம் தர முடியும். காமு சொன்ன படி கொள்ளை நோயை ஒழிக்க வேண்டும் .கொள்ளை நோய் வந்தவனை மருத்துவர் காப்பாற்ற வேண்டும் .இப்படிதான் அர்த்தமற்ற வாழ்வுக்கு நாமாக அர்த்தம் தேடிக் கொள்ள முடியும் .அக்கிரமங்களை ஏற்க முடியாது .எதிர்த்தாக வேண்டும் .அக்கிரமம் /ஆதிக்கம் /அழிவு செய்வோர்களை அழித்து மக்களை/ இயற்கையை காப்பாற்ற வேண்டும் .அதன் பிறகு நிம்மதியாக சாகலாம்

Tuesday 13 December 2011

மார்க்சியம்-சமதர்மம்

   மார்க்சியம் காலாவதியாகிவிட்டது  என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் மார்க்சியம் பற்றியே தொடர்ந்து பேசுகிறீர்கள் .மார்க்சியத்தின் பால் உங்கள் நம்பிக்கைக்கு என்ன காரணம் ? கேள்வி: யோக செந்தில் குமார் 
   மார்க்சியத்தின் மையம் என மார்க்சியம் முன்வைக்கும் சமதர்மம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன் .சமதர்மம் தான் மனித  அறம் மனிதர்களுக்கான அறம் . ஒரு தேசத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் சில அடிப்படையான தேவைகளை அரசு என ஒன்று இருக்குமானால் அது நிறைவு செய்யவேண்டும் ..அடிப்படைத் தேவைகள் என்று சொல்லும்போது ,உணவு ,உடை ,இருப்பிடம் ,வேலைவாய்ப்பு ,என்பனவற்றோடு நிறுத்திக்கொள்ள  முடியாது  அனைவருக்கும் கல்வி ,மருத்துவம் ,சுகாதாரம் ,வாழ்வுக்கான பாதுகாப்பு என்பனவும் தேவை .அடிமைத் தனம்  மனித வாழ்வின்  மாண்பை நாசமாக்கும் .எவ்வகை அடிமைத்தனமும் நமக்கு வேண்டாம் .எவ்வகையில்  ஆதிக்கம் நிலவினாலும் மனிதர்கள் அடிமைத்தனத்திற்கு உள்ளாக வேண்டும்.கலை,இலக்கியம் ,இல்லாமலும் மனிதனுக்கு வாழவில்லை இவையனைத்து மனிதருக்கும் உறுதி செய்யப்படவேண்டும் .
      இப்படிச் சொல்லும்போது இவற்றைத்தருவதற்கு ,இவற்றை உறுதி செய்வதற்கு அரசு தேவை என்றாகிறது .தன் மக்கள் மீது ஆதிக்கம் செய்வதாக எந்த   அரசும் இருக்க முடியாது .பெயரளவுக்கு ஜனநாயகம் என்று சொல்லி தேர்தல் முதலிய நெறிகள் மூலம் அதிகாரத்தை தனக்கென உறுதிப்படுத்திக்கொள்கிற அரசு நமக்கு வேண்டாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை எவ்வகையிலேறும் ஆதிக்கம் நிலவும் .சாதி மதம் முதலியனவும் ஆதிக்கத்தின் கருவிகள் .
     இப்படி மனித வாழ்வை தரமான முறையில் தகுதியான முறையில் வகுத்துக்கொள்வதற்கான தேசம் நமக்கு வேண்டும் சமூகம் நமக்கு வேண்டும் .இன்றுள்ள நிலையில் எத்தனையோ குறைபாடுகள் நிலவுகின்றன .அனைத்து மக்களுக்கும் நாம் பட்டியலிட்டபடி உணவு, கல்வி ,மருத்துவம் ,வேலைவாய்ப்பு  முதலிய வற்றை  ஒரு தேசம் என்ற முறையில் இந்திய அரசு உறுதிப்படுத்தும் என்ற முறையில் வைத்துக் கொண்டால் இந்தியாவில் இத்தனை ஊழல்கள் ,அரசதிகாரக்கொடுமைகள் ,பன்னாட்டு  நிறுவனங்கள் ,பெரும் பெரும்  முதலாளிகள் இருக்க முடியாது .இராணுவ கொடுங்கோன்மை  நடைபெற முடியாது .80 / 90  விழுக்காட்டு மக்களிடமிருந்து, அவர்களுக்கான வளமான வாழ்வு ,வேலைக்கு உறுதி, கல்வி வாய்ப்பு முழுமையான  மருத்துவவசதி  முதலியவற்றைப் பறித்த  நிலையில் தான் இந்தியாவில் இத்தகைய கொடுமைகள், ஊழல்கள் , இராணுவ  பெருக்கம் அணு ஆயுதப்பெருக்கம் ,பயங்கரவாதம் என்ற பெயரில் மக்கள்மீது ஒடுக்குமுறை  முதலியவை நிலவுகின்றன .தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன .காடுகள் அழிக்கப்படுகின்றன.எங்கும் சாக்கடைகள் ,மருத்துவமனையில் மக்கள் ,புதுவித நோய்கள் ,தற்கொலை ,மனநோய்கள் ,விபத்துக்கள் இவையெல்லாம் ஏன் ஏற்படவேண்டும்? இலவசக்கல்வி ஏன் தரப்படவில்லை ?.வறுமைகோட்டிற்கு கீழ்  40  விழுக்காட்டு மக்கள் ஏன் இன்றும் இருக்க வேண்டும்? .கிராமத்தில் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு ஊதியம் 30 ,40 ,50  அல்லது 100  இந்தியாவில் ஒரு பெரு முதலாளிக்கு ஒரு நாளைக்கு ஊதியம் ரூ .10 கோடி / 100  கோடி கறுப்பு பணத்திற்கு ஏதேனும் அளவு உண்டா ?
    நிதி நிறுவனங்களும் கொள்ளையடிக்க வேண்டுமா ? வங்கிகளை யார் கொள்ளையடிக்கிறார்கள் ? காஷ்மீரில் ஏன் எத்தனை லட்சம்  மக்கள் கொல்லப்படவேண்டும்? இப்படி ஆயிரம் கேள்விகள் நாம் கேட்கிறோம் .குறைந்த அளவுக்கேனும் 80 /90  விழுக்காட்டு உழைக்கும்  மக்களுக்கு அமைதியான உறுதியான கவுரவமான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இங்கு வாய்ப்புண்டா ? இன்னும் குழந்தைகள் சாவுத் தொகை குறையவில்லை . பெண்களின் அடிமைத்தனம் நீங்க வில்லை .சமயத் தலைவர்களுக்கு ஏன் கோடிக்கணக்கில் செல்வம்,அதிகாரம் ,நிலவுடமை? ,அந்நியர்களுக்கு ஏன் எல்லா உரிமைகளும்? இந்து முஸ்லிம் கலவரங்கள் ,சாதிச்சண்டைகளுக்கு என்ன தேவை? ஏற்றத்தாழ்வுகளை ,வர்க்க வேறுபாடுகளைத் தொடர்ந்து வைத்துக் கொண்டும் இவற்றை உறுதிப்படுத்திக்கொண்டும் இருக்கிற அரசு முறை பொருளியல் முறை ,முற்றாக ஒழிய வேண்டும் என்பதற்கான ஏதேனும் வழிமுறை பற்றி இங்கு தீவிர மான  சிந்தனை  உண்டா?கல்வி நிலையங்களில் இத்தகைய சிந்தனை  கற்றுத் தரப்படுகிறதா ? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எத்தனை பாதுகாப்பு!  எத்தனை வருமானம்! ?அரசியல்வாதிகள் என்ற பெயரில் எத்தனை இலட்சம் ஊதாரிகள் ஊழல் பேர்வழிகள்! ,மாபெரும் கடைத்தெருக்களில் எத்தனை ஆரவாரம் !. கிரிக்கெட் விளையாட்டுக்களில் எத்தனை ஆயிரம் கோடி வீண்செலவு! எதற்கு  இத்தனை திரைப்படங்கள்? தொலைக்காட்சிகள்?கோவில் திருவிழாக்கள்? இவையெல்லாம் ஒரு தேசத்தின் வாழ்வை மேம்படுத்துகிறதா?
        சமதர்மம் என்ற உணர்வுக்கு நான் தரும் அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை என் தனி வாழ்கையில் வைத்துப் பேசுவது பொருத்தமாகும் .நான் திரட்டியிருக்கும் அறிவு வளத்தை நானாகத் திரட்டிக் கொள்ளவில்லை .ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பலகோடி மக்கள் பலநூறு துறைகளில் சேகரித்த மாபெரும் அறிவுச்செல்வத்தின்  ஒரு சிறு துளி எனக்குள் இருக்கிறது .என் கலை உணர்வையும் இப்படித்தான் திரட்டிக்கொண்டேன் .என் வாழ்வுக்கு ஆதாரம் என்று தேடிப்பார்த்தால் உழவர்கள் நெசவாளிகள் என்று பல்லாயிரம் பேரைச்சொல்லவேண்டும்.என் உடல் நலத்திற்கும் நான் பெற்றுள்ள மருத்துவ வாய்ப்பிற்கும் நான் வாழும் வரலாற்றுச்சூழல் காரணம் .நெடுங்கால வரலாற்றுக்குள் நான் இருக்கிறேன் /இயங்குகிறேன் .மாபெரும் சமூகம் என்னைத் தாங்குகிறது.என்னைத்தாங்கும் மக்களும் பல்லாயிரவர். .இப்படி இருக்க என் அறிவோ ,கலை உணர்வோ என் உடைமை என்று கருதி இதற்காகப் பெருமை பேசி, இந்த உடைமைக்கு கூலி வாங்கி, அல்லது இலாபம் சேகரித்து, பலரை எனக்கு கூலிகளாக்கி ,பலரை வஞ்சித்து, பலர் மேல் அமர்ந்து ஒரு எழுத்தாளன் என ஒரு ஆசிரியன் என நான் எப்படி வாழ  முடியும் .கல்வியாளர்கள் அறிஞர்கள் முதலியவர்களிடம் வேறு என்ன நான் எதிர்பார்க்கமுடியும் சமதர்ம  உணர்வில்  தான் நமக்குள் தழைக்க  முடியும். இந்த உணர்வோடுதான் தேசத்தையும் நான் பார்க்கிறேன் .
     ஓர் இலக்கியவாதி என்ற முறையிலும் சமகால அரசியலில் அக்கறையுடையவன்  என்ற முறையிலும் சமதர்மம் என்ற பேருணர்வை இழந்து விடாமல்  தேசம், அரசியல் ,சமூகம் இலக்கியம் ,முதலியவற்றை  நான் பார்க்கிறேன் .இந்தத்தேசத்தில் உள்ள ஆக்கங்கள் அனைத்தையும் உருவாக்கியதில் உழைக்கும் மக்களுக்கும் அறிஞர்களுக்கும் கலைஞர்கள் முதலியவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு . இவர்களுக்கு குறைந்த அளவுக்கேனும் நிறைவான வாழ்க்கை பெறுவதற்கு முழு உரிமை உண்டு .இவர்களுக்கானது இந்தத்தேசம்  இயற்கை ,நிலம் ,நீர் , அனைத்திலும்  இவர்களுக்கே முதல் உரிமை . அந்நியர்  படையெடுத்து வந்து இவர்கள் தேசத்தையும் இவர்களையும் ஆக்கிரமித்து அடிமைப்படுத்துவது போல இந்த நாட்டில் உள்ள முதலாளிகளும் அரசியல்வாதிகளும் சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ள அதிகாரிகள்  முதலியவர்களும் இந்த உழைக்கும் மக்கள் மற்றும் அறிவாளிகளிடமிருந்து இந்தத்தேசத்தையும் இவர்களின் உரிமைகளையும் இவர்களின் சுதந்திரத்தையும் வாழ்வையும் அபகரித்து ,அடிமைப் படுத்தித், தமக்கான  வாழ்வையும் அதிகாரத்தையும் உருவாக்கிக் கொண்டிருப்பதை எப்படி பொறுத்துக்  கொள்ள முடியும் . இம்மக்களின் வாழ்வு வளர்ச்சி விடுதலை என்ற உணர்வை மையத்தில் இருத்தித்தான் இந்திய அரசு முதலாளியம் முதலிய வற்றை நாம் விமர்சனம்  செய்கிறோம் .நம் நெஞ்சில் இருப்பது சமதர்ம உணர்வு . தொன்ம இலக்கியம் சமயம் முதலிய எல்லாவற்றையும் இந்த உணர்விலிருந்து தான் நாம் பார்க்கிறோம் . முதலாளியச்சூழலை மாற்றுவதன் மூலமே சமதர்ம சமூகத்தை படைக்க முடியும் .ஒரு எழுத்தாளன் ஒரு ஆசிரியன் என்ற முறையில் என்னுடைய விருப்பமும் தேவையும் இதுவாகத்தான் இருக்கிறது .ஆகவே தான் சமதர்மம் பற்றி ஓயாமல் பேசுகிறேன் .

Tuesday 22 November 2011

ஜெயகாந்தன்

                    உங்களைப் பெரிதும் பாதித்த தமிழ் எழுத்தாளர் என்று எவரைக் குறிப்பிடுவீர்கள் ? ஏன்? எப்படி ? என்பதைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள் .
       உடனடியாகச் சொல்வதென்றால் ஜெயகாந்தனைத், தான் என்னால் சொல்ல முடியும் .கல்கி,அகிலன் ,நா.பார்த்தசாரதி என்று தொடங்கி என் இளமைக்காலத்தில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களை நான் படித்திருக்கிறேன் என்ற போதிலும் ஜெயகாந்தன் தான் எனக்கான இலக்கிய உணர்வு, கலை உணர்வு,  முதலியவற்றுக்கெல்லாம் காரணமாக, இன்னும் சரியாகச் சொன்னால் ஆதாரமாக இருந்திருக்கிறார் . மார்ச்சிய உணர்வில் எனக்குள் உறுதி ஏற்பட்ட அந்தக் காலச்சூழலில் ஜெயகாந்தன் தான் எனக்குள் முழுமையாக இடம் பெற்றார்.

     இரகுநாதனோ டி.செல்வராஜோ எனக்குப் போதுமானவராக இல்லை ,பெரியாரோடு அவர் நடத்திய விவாதத்தில் நான் ஜெயகாந்தனுக்குத்தான் நெருக்கமாக இருந்தேன் ."அக்னிப்பிரவேசம்" என்ற சிறுகதை தமிழகச் சூழலில் கடுமையான விவாதங்களைக் கிளப்பிய போது ஜெயகாந்தனின் பார்வைதான் எனக்கு இசைவாக இருந்தது . ரிசிமூலம் ,பிரளயங்கள் , சமூகம் என்பது நாலுபேர்,முதலிய குறுநாவல்களை ஜெயகாந்தன் தந்த போது என்னை முழுமையாகவே ஜெயகாந்தன் ஆக்கிரமித்துக் கொண்டார் என்று என்னால் சொல்ல முடியும் .நம் சமூகச் சூழலில் காமம் என்ற உணர்வு,அதை சரியாக அணுக இயலாத நிலையில்  மனித ஆளுமைக்குள் எத்தகைய சிதைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பது பற்றிய ஜெயகாந்தனின் புரிதல், எனக்குள் ஒரு பெரிய வெளிச்சமாக வந்து சேர்ந்தது .

      நவீன  கால அரசியலுக்கும் சமதர்மம் என்ற பொருளியலுக்கும் இந்திய மெய்யியல் மற்றும் தமிழ் மெய்யியலுக்கும் ஒப்பற்ற இணைப்பு புள்ளியாகவும் நவீன உலக பார்வைக்கு ஒரு திறப்பாகவும் விளங்கிய பாரதிதான் நமக்கான பேராசான் என்ற முறையில் பாரதியை தனக்கு ஆசானாக வரித்துக்   கொண்டவர் ஜெயகாந்தன் .திரும்பத்திரும்ப பாரதி பற்றி ஓயாமல் ஜெயகாந்தன் முழங்கிய போது நான் மட்டுமல்லாமல் எத்தனையோ தமிழ் உணர்வாளர்கள் ஜெயகாந்தன் மூலம் பாரதியை ஒரு தரிசனம் போல எங்களுக்குள் பத்திரப்படுத்தினோம் .
      ஜெயகாந்தனைப் பற்றி நானும் சில கட்டுரை எழுதியுள்ளேன் .தமிழகத்தில் திருவள்ளுவர் தொடங்கி திருமூலர் தாயுமானவர் ,வள்ளலார் ,வரையில் தொடரும் ஆற்றல் மிகுந்த சித்தர் மரபில் இன்னொரு விளைச்சல் எனப் புதுமைப்பித்தனோடு  ஜெயகாந்தனையும் நான் மதிப்பிட்டு எழுதிய கட்டுரை ஜெயகாந்தனுக்குள் என்றும் அழியாத தமிழ்மரபின் வீச்சை எடுத்துரைக்கிறது .ஜெயகாந்தன் படைப்புகளிலும் சித்தர்கள் எத்தனையோ வடிவங்களில் ஓயாமல் தொடர்வதைத் தமிழ் வாசகர் உணரமுடியும்.

           ஜெயகாந்தன் மார்க்சியராக இருந்து கொண்டே ஆன்மீகம் பற்றியும் ஆழமாகப் பேசினார் .கட்சி மார்க்சியர் அவரைத் தாக்கவும் செய்தனர் லெனின் சமாதியில் ஜெயகாந்தன் தலைக்கு மேல் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு சுற்றி வந்ததை  என்னால் ஏற்க முடிந்தது .
       இளமைக் காலத்தில் எனக்குள்ளும் வீறியத்தோடு சமய உணர்வு இருந்தது . பின்னர் சமயத்தின் புறக் கூறுகளான கோவில் வழிபாடு சடங்குகள் முதலியவற்றை நான் உதறிக் கொண்ட பின்னரும் எனக்குள் சமயத்தின் அகக்கூறான ஆன்மீக உணர்வு இயல்பாகவே தங்கியது .மார்க்சியம் குறிப்பிடும் சமதர்மம் என்ற உணர்வுக்கு இந்த ஆன்மீக உணர்வு நெருக்கமாக இருந்தது .ஜெயகாந்தன் கருதியது போல நானும் மார்க்சியத்திற்கு நெருக்கமாக இந்த ஆன்மீக உணர்வைக் கண்டு கொண்டேன் . மார்க்சியம் எனக்குள் மேலும் உறுதி பெறுவதற்கு இவ்வகையில் ஜெயகாந்தன் காரணமாக ஆகியிருக்கிறார்
       ."ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் " என்ற நாவலில் ஹென்றியை என்னால் எளிதாக ஏற்க முடிந்தது .ஜெயகாந்தன் பார்வையில் ஹென்றி இயேசுவின் இன்னொரு பிறப்பு .இலக்கண மீறிய கவிதை முதலிய படைப்புகளில் ஜெயகாந்தன் முன்வைத்த பெண்ணைப் பற்றிய பார்வை தமிழிலக்கியத்திற்கு முற்றிலுமான ஒரு புதிய பார்வை .வேசி என்று எந்தப் பெண்ணையும் ஜெயகாந்தனால் குறைத்துப் பேசவே முடியாது . எந்தப் பெண்ணிற்குள்ளும்  உள்ள தாய்மை உணர்வு வணக்கத்திற்குரியது . " ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் " நாவலில் கல்யாணியின் கலை உணர்வை அழகியலுணர்வை,முதன் முறையாக நான் புரிந்து கொண்டு கொண்டாடினேன். ரங்கனின் பார்வை வரட்டுத்தனமான கம்யூனிஸ்ட்டின்  பார்வை. கங்கை எங்கே போகிறாள் . நாவலில் கங்கை ஆற்றில் தன்னை சங்கமமாக்கிக் கொண்ட கங்கா எனக்குள் ஒரு பேரதிர்வை ஏற்படுத்தினாள். புரியாத காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட "விபத்தை " புரிந்து கொள்ளாமல், உறவினர்களும் மற்றவர்களும் ஒரு பெண்ணைத் தண்டிக்க தொடங்கினால் அவளுக்குள் எத்தகைய திரிவும் இறுக்கமும் ஏற்பட்டு இறுதியில் அவளுக்கு என்ன நேரும் என்பதை கங்கா  என்ற அற்புத படைப்பில் ஜெயகாந்தன் பெண்பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறார் .பெண்ணியம் பற்றி ஜெயகாந்தன் வெளிப்படையாகப் பேசவில்லை என்பது போலவே தலித்தியம் பற்றியும் ஜெயகாந்தன் பேசவில்லை என்பதெல்லாம் எத்தகைய தவறான கருத்து என்பதற்கு ஜெயகாந்தன் படைப்புகளே சான்றாகின்றன
   .'ஜெயஜெய சங்கர ' நாவலில் சங்கராச்சாரியரை ஜெயகாந்தன் கொண்டாடுகிறார் என்று பலர் சாடும் குறை  படைப்பென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களுடைய அப்பாவித்தனமான பார்வை . இந்தக் குறுநாவலில் இடம்பெறும் சங்கரர் ஜெயகாந்தனுடைய சங்கரர் இவர் சங்கராச்சாரியார் இல்லை.
  விகடனில் ஜெயகாந்தன் எழுதத் தொடங்கியது முதற்கொண்டே மார்க்சியத்திலிருந்து விலகி தமக்குள் முதலாளியச் சார்பை மேற்கொண்டார் என்று  சிலர் கடுமையாகச் சாடியதை நான் ஏற்கவில்லை .ஜெயகாந்தன் படைத்த பிரபு முதலிய முதலாளிகளை முன்வைத்து இப்படி ஒரு குற்றசாட்டை முன்வைக்க முடியுமானால், கார்க்கியின் படைப்பிலும் இத்தகை மனிதனைக் காணமுடியும்.முதலாளியம் ஒரு மனிதனை எப்படிச் சீர்குலைக்கிறது என்பதற்கு  பிரபு  ஒரு சான்று .
   ஜெயகாந்தன் படைப்புகளில் ஜெயகாந்தனே எல்லாப்  பாத்திரங்களுக்குள்ளிருந்தும்  பேசுகிறார் என்று பலரும் முன்வைக்கும் ஒரு குற்றசாட்டு எனக்கு உடன்பாடில்லை .முரண்பாடுகளுக்கிடையில் அவதிப்படும் தமிழர்களின் மனச்சான்றுக்குள்ளிருந்து ஜெயகாந்தன் உரத்த குரலில் தன் பாத்திரங்கள் மூலம் பேசுகிறார் என்பது என் புரிதல் .

         இவ்வளவும் சொன்னபிறகு ஜெயகாந்தனின் அண்மைக்காலம் பற்றிச் சொல்லவேண்டும் .ஜெயகாந்தன் தொடர்ந்து படைக்கவில்லை என்று நான் கூறமாட்டேன் .அவர் படைத்தவை போதுமென்றும்  நான் கருதமாட்டேன் .படைப்பியக்கம் எப்படியோ அவருக்குள் தளர்ந்து விட்டது . ஒரு படைப்பாளி எவ்வளவு காலத்திற்குத்தான் வீரியத்தோடு இயங்க முடியும்? .தமிழ்ச்சமூகத்தில் அவருக்கு நிகராக அவரளவுக்கு வீரியத்தோடு இயங்கிய எழுத்தாளர் இன்னொருவரில்லை .தமிழ் சமூகத்தில் எல்லாக் களங்களினுள்ளும்  பேராற்றலோடும் பெருமிதத்தோடும் இயங்கினார் .இவரை ஆழ்ந்து கற்காதவர்கள் அவரைப் பற்றித்தொடர்ந்து அவதூறுகள் கிளப்பினர் என்று தான் என்னால் சொல்ல முடியும் .
     கடந்த சில ஆண்டுகளில்  அவரது இயக்கம் எனக்கு உடன்பாடாக இல்லை . அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய போது அமெரிக்காவில் சோசலிசம் வாழ்கிறது என்றார் .எல்லா வகையிலும் சீர்கெட்ட ஜெயந்திரரை அவர் பார்த்துப் பேசியதாகவும்  சொன்னார்கள் .உடல் நோயுற்ற போது கலைஞருக்கு நெருக்கமானார் இவையெல்லாம் ஜெயகாந்தனுக்கு மரியாதை தருவதாக  இல்லை என்ற போதிலும் ஜெயகாந்தனும் ஒரு மனிதர் என்ற முறையில் அவரைப் புரிந்து கொள்ள நாம் மறுக்க முடியாது .

           கடைசியாக ஓன்று ஜெயகாந்தனை எத்தனை மேடைகளில் பார்த்து நான் இரசித்திருக்கிறேன் .நேரிலும் அவரை சிலமுறை நான் சந்தித்திருக்கிறேன் .ஆழ்வார் பேட்டையில் ஒரு சமயம் நண்பர் சூழ, அவர் அவருக்கேயான தோரணையில் உரையாடல் நிகழ்த்திய போது அவர் முகத்தின் பேரொளிப் பிளம்பு கண்டு பெரும் வியப்புற்றிருக்கிறேன் . என்னிடத்தில் பேரன்பும் மரியாதையும் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார் . "விஷ்ணு புரம்" நாவல் என்னதான் சொல்கிறது என்று என்னிடம் கேட்டு நான் நெடுநேரம் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தார் . டங்கல் திட்டம் குறித்து எவ்வளவு பேசினாலும் என் கருத்தை அவர் ஏற்காமல்  டங்கல் திட்டத்தை அவர் உறுதியாகச் சார்ந்தே பேசிக்கொண்டு இருந்தார் . அவர் கருத்தை என்னால் மாற்றத்தான் முடியவில்லை .
   கோவையிலிருந்து சென்ற நண்பர் ஒருவர் தலித்தியம் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை என்று கேட்டபொழுது, கோவையில் "நீங்கள் ஞானியைக் கேளுங்கள் " என்று சொல்லி அனுப்பினார் . இன்று அவர் எப்படி இருந்த போதிலும் ஜெயகாந்தனைப் பற்றிய என் பிரமிப்பு  என்றும் குறையாது .அவர் என் ஆளுமைக்குள் கலந்துவிட்டவர் .

          ஜெயகாந்தனைச் சுற்றி ஓயாமல் வலம் வந்த ஒரு கும்பல், ஜெயகாந்தனிடமிருந்து என்னை விலக்கியே வைத்திருந்தது என்பதை என்னால் குறிப்பிடாமல்  இருக்க முடியவில்லை .

             நகராட்சி கலையரங்கில் நடந்த ஒரு கூட்டத்திற்கு வந்த ஜெயகாந்தன், காரிலிருந்து இறங்கிய போது, ,அரங்குக்கு வெளியில் நண்பர்களோடு அமர்ந்திருந்த என்னைப் பார்த்து என்னை நெருங்கி வந்து  கண்பார்வை இல்லாத என்னிடம் "வணக்கம் நான் ஜெயகாந்தன்" என்று கூறிய ஜெயகாந்தன் அவர்களின் பெரும் கருணையை எப்படி என்னால் மறக்க முடியும் !

           தமிழில் அகிலனுக்குப் பிறகு ஞான பீட  பரிசு பெறுவதற்கு தமிழுக்குத் தகுதியில்லை என்ற முறையில் தமிழ் இலக்கியத்தின் மீது மரியாதை செலுத்தாத ஞானபீட  நிறுவனம், ஜெயகாந்தனுக்கு ஞானபீட பரிசை வழங்கியதன் மூலம் தன்னை மரியாதைக்குரிய நிறுவனமாகச் செய்து கொண்டதோடு, தமிழிலக்கியத்தின் மீதான மரியாதையை தமிழராகிய நாம் மீட்டுக் கொண்டதற்காக ஜெயகாந்தனுக்கு நன்றி செலுத்த வேண்டும் ..



Sunday 6 November 2011

அந்நியமாதல்

1 என் கட்டுரைகள் சிலவற்றில் அந்நியமாதல் என்ற சொல் திரும்பத்திரும்ப வருவதைக் குறிப்பிட்டு முனைவர் பட்ட ஆய்வாளர் ஒருவர் இச்சொல்லின் கருத்து எனக்கு விளங்கவில்லை சற்று விளக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார் (ஆய்வாளரின் பெயர் திருமதி ஆனந்த ஜோதி )

       வழக்கமாக ஆய்வு மாணவர்கள் இப்படி எல்லாம் கேள்வி எழுப்புவதில்லை இவர் கேட்டது எனக்கு வியப்பாக இருந்தது சுருக்கமாக பதில் சொல்வது சற்று சிரமம் என்றாலும் இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு விளக்கத்தை இங்குத் தர விரும்புகிறேன் .

   வேலையில்லை என்பதால் வேலைத்தேடி முன்பு அறிமுகமில்லாத அலுவலகம் ஒன்றிற்கு நாம் செல்கிறோம் . நெடுநேரம் காக்க வைத்த பிறகு அலுவலர் நம்மை அழைக்கிறார் அவர் நம்மை உட்கார சொல்லவில்லை .ஏறிட்டு பார்த்தபடி சில கேள்விகளை கேட்கிறார் சற்று சங்கடத்துடனேயே தடுமாறியபடி பதில் சொல்கிறோம் பிறகு நாளை வா என்று சொல்லி அனுப்புகிறார் இந்த சூழலில் அந்நியராக நம்மை உணர்கிறோம் .இது நமக்கு உரிமையான இடமில்லை நம்மை மரியாதையோடும் அணுகவில்லை தெரிந்த சில விவரங்களையும் அரைகுறைவாகவே சொல்லி வைக்கிறோம் ஏன் இங்கு வந்தோம் என்றிருக்கிறது  நமக்கு.

  இத்தகைய மனநிலையை பல்வேறு சமயங்களில் நமக்குள் உணர்ந்திருக்கிறோம் இன்னொரு உதாரணம்.

     நம் மாநிலத்தை விட்டு வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு செல்கிறோம் .சில தேவைகளுக்காக சிலரை  கேட்டாக வேண்டும் சரியான பதில் நமக்குக் கிடைப்பதில்லை அங்கு நாம் அந்நியர் ..இவனுக்கு இங்கு என்ன வேலை என்று அவர்கள் நினைப்பது போல் தோன்றுகிறது .

   திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் மணமகன்  வீட்டிற்கு செல்கிறாள் முற்றிலும் புதிய சூழ்நிலை வித்தியாசமான கலாச்சாரம் மணப்பெண் தடுமாறுகிறாள் சூழல் பெருமளவு மாறுகிறவரை அவள் இங்கு ஓர் அந்நியர்.

    முதலாளிய சமூகத்தில் ஏற்படும் அந்நியமாதல் பற்றி மார்க்ஸ் மிக நுட்பமாக சில விளக்கங்களைத் தருகிறார் . முதலாளிகள் விதிக்கும் வரையறைகள் கட்டுபாடுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு தொழிலாளி வேலைக்கு செல்கிறார் . எட்டுமணிநேர உழைப்பு உழைப்பில் முழுமையான கவனம் தேவை இடையில் அரைமணிநேர ஓய்வு அரட்டை அறவே கூடாது கொடுத்த வேலையை முடித்து வெளியேற வேண்டும் . பேசிய கூலிக்கு மேல் எதையும் எதிர்ப்பார்க்க கூடாது .இத்தகைய வரையறைக்குள் உழைக்கிற தொழிலாளி இங்கு ஓர் கூலிக்காரன் . கூலிக்காக உழைக்கிறான் மனைவி குழந்தைகளுக்காக வயிற்றுப்பசி தீர்வதற்காக உழைக்கிறார்  .. நாளடைவில் கட்டுப்பாடுகள் கூடுதலாகின்றன .உழைக்கிற இடத்தில் உரிமைக்கு இடமில்லை உறவை வளர்த்துக்கொள்ள முடியாது சற்றுக்கவனம் சிதறினாலும் ஏற்படும் பிழைக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் .

      தொடர்ந்து வேலையில் ஆர்வத்திற்கு இடமில்லை சொந்த வேலை என்றால் நிதானமாக செய்யலாம் .இடையிடையே ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்தவரிடம் பேசிக்கொண்டு இடையில் பாட்டும் கேட்டுக் கொண்டு உழைத்தால் போதும் தன் விருப்பத்திற்கு ஒத்த முறையில் வேலையில் மெருகேற்றலாம் ..ரசித்து வேலை செய்யலாம் .ஆனால் தொழிற்சாலையில் இதற்கு இடமில்லை .தான் ஒரு கூலிக்காரன் மட்டுமே .. தான் இங்கு மனிதனில்லை .கை கால் இருப்பது உழைப்பதற்காக  உழைப்பது வயிற்றுப்பசி தீர்வதற்காக .. வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? இதற்காகத்தான் வாழ வேண்டுமா ? இயந்திரத்தோடு இவர்  உழைக்கிறார் நாளடைவில் தானும் இயந்திரத்தின்  ஓர் பகுதி , கருவி .முதலாளிக்காக உழைத்து இவர்  தேய்கிறார்  . கூலிக்காரனுக்கு என்ன தன்மானம் வேண்டிக் கிடக்கிறது. மனம் ஒன்றி உழைக்க முடியவில்லை ..தனக்குத்தானே ஒரு கேலிப்பொருள்.

   தொழிலாளி இப்படித்தான் இந்த சமூக சூழலால் முதலாளிய சூழலில் அந்நியமாகிறார்.தொழிற்சாலையில் இவருக்கு வேறு இடம் எதுவுமில்லை வாழ்க்கை இவருக்கு கசக்கிறது .. வெறுப்பு ஏறுகிறது . எதற்கு நான் வாழ வேண்டும் குறைந்த கூலிக்கு உழைக்கிறார்  வீட்டிலும் மரியாதை இல்லை உறவுகளோடு ஓட்ட முடியவில்லை தனக்குள்ளும் இவர்  அந்நியன் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன் எனக்கு நானே பகையாகி விட்டேன் ,தற்கொலை கூட இனி ஒரு சுகம் தான் .இது சுய அந்நியமாதல் என்கிறார் மார்க்ஸ் .

   தொழிலாளியை முன்வைத்து அந்நியமாதலை மார்க்ஸ் விளக்கினார் இன்றைய சமூக சூழலில் நம்மை ஒரு புள்ளியில் வைத்து நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்பி கொள்வோம் .நம் வாழ்வு நமக்கு நிறைவு தருவதாக இருக்கிறதா ? யாருக்காக உழைக்கிறோம்? வேறு எவர் தேவையை நிறைவேற்றுவதற்க்காக நாம்  உழைக்கிறோம்? . நம்மை வைத்து மற்றவர் செல்வம் சேர்க்கிறார்கள்  பிறர் அதிகாரத்திற்கு நாம் சேவகம் செய்கிறோம் பிறர் நியாயத்தை நாம் ஏற்றாக வேண்டும் அதிகாரி செய்வது அநீதி என்றாலும் அதற்க்கு நாம் கட்டுப்பட வேண்டும் .உண்மை எது என்று தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த  முடியாது .நமக்கு தெரிந்த நீதியை செயல் படுத்த முடியாது . சுயமாக நம்மால் செயல்பட முடியாது நமக்கு சுயம் என ஓன்று தேவையில்லை . கணவனுக்கு மனைவி கட்டுப்பட வேண்டும் .. அதிகாரிக்கு ,அரசுக்கு முதலாளிக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் மற்றவர் நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள் .பிறர் விதிக்கும் கட்டுபாடுகளை ஏற்று நம்மை நாமே இழக்கிறோம் நம்மை நாமே நொந்து கொள்கிறோம் ஒரு வகையில் மனநோய்க்கு ஆட்படுகிறோம் கடவுளே எது என்ன சோதனை என்று ஓலமிடுகிறோம் ..எனக்கென ஒரு ஆன்மா உண்டா என்று கேட்கிறோம் உலகம் என்ன ஆயிற்று என் தலைவிதியை நிர்ணயிப்பது யார் ? கடவுள் படைத்த உலகு தானா இது ? கடவுள் என ஒருவர் உண்டா ? இது அந்நியமாதல் .

2. இடையில் ஆனந்தி எதுவும் கேட்கவில்லை என்றாலும் அவருக்குள் இன்னொரு கேள்வி எழுந்திருக்ககூடும் அந்நியமாதல் என்ற சிக்கல் முதலாளிய சமூக சூழலில் தோன்றியது  போல தோன்றினாலும் தொன்மைக் காலம் முதற்கொண்டே இத்தகைய சிக்கலில்தான் மனிதன் அகப்பட்டு இருந்ததாக தோன்றுகிறது . இப்படிதானா என்றும் இதற்கான விளக்கம் என்னவென்றும் அந்நியமாதலைத் தவிர்க்க முடியாதா என்றும் அந்நியமாதல் என்ற சிக்கல் என்று தீரும் என்றும் தொடர்ச்சியான கேள்விகள் நமக்குள் எழலாம் .இவை பற்றியும் இங்கு சுருக்கமாக வேணும் கூற வேண்டும் 

   முதலாளிய சூழலில் தொழிலாளி தனக்குள் அன்னியப்பட்டு இருப்பதை உணராமல் இருக்க முடியாது . தன் அடிமைத் தனத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் முதலாளிய சூழலுக்கு எதிராக அவன் போராட வேண்டும் . பிற தொழிலாளிகளோடு இணைந்து முதலாளிய சூழலுக்கு எதிராக தமக்கு இயன்ற வகையில் ஒன்றிணைந்து போராடியே ஆக வேண்டும். முதலாளிய சூழல் என்பது தொழிலாளிகளை மட்டுமல்லாமல் பிற மனிதர்களையும் தனக்குள் அகப்படுத்திக் கொண்டிருக்கிற சூழல் இந்த சூழலும் நெடுங்கால வரலாற்றோடு இணைந்து முன்னையதன் தொடர்ச்சியாகத் தான் இருக்கிறது .

    இங்கு இன்னொன்றை சொல்ல வேண்டும் முதலாளிய சூழலில் தாங்கள் அகப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளாதவர்கள் அந்நியமாதல் என்ற சிக்கலை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் தான் அகப்பட்டுள்ள துயரத்தை தீர்த்துக் கொள்ள முடியும் என நம்பி சிலர் கடவுளை சரணடையலாம் சிலர் கோவில் வழிபாடு சடங்குகள் சாத்திரங்கள் என்பனவற்றுக்குள் தனக்கு விடுதலைக் கிட்டும் எனத் தேடி அலையலாம்.

   இன்னும் சிலர் இந்த சூழல் நெருக்கடியில் இருந்து  தப்பும் முறையில் மதுவுக்குள் பாலுறவுக்குள் சூதாட்டத்திற்குள் வேற்று வேடிக்கைகளுக்குள் தன்னை மூழ்கடித்து கொள்ளலாம் தம் துயரத்தை மறக்க வேண்டும் என்ற முறையில் இப்படி சில மயக்கங்களில் பிரம்மைகளில் ஆழ்த்திக் கொள்ளும் இவர்களுக்கு இவை நிரந்தரமான விடுதலையை தருவதில்லை மயக்கம் தீர்ந்த நிலையில் துயரங்கள் இவர்களை பற்றிக் கொள்கின்றன .

     துயரம் எங்கு தொடங்கியது என்ற உணர்வு இல்லாத இவர்கள் தம் உடனடி துயரத்திற்கு தனக்கு அண்மையில்  உள்ளவர்கள் தான் காரணம் என்று மனைவியோடு அண்டை அயலவர்களோடு இவர்கள் சச்சரவு செய்யலாம் அவர்களை தாக்கலாம் கொலையும் செய்யலாம் போட்டி பொறாமை வம்பு வழக்குகள் முதலியவை இதன் காரணமாகத்தான் நிகழ்கின்றன ..

    படித்தவர்கள் என்ன செய்கிறார்கள் அலுவலகத்தில் அதிகாரியின் அடக்கு முறைகளுக்கு உள்ளாகி அலுவலகப் பணிகளை கடனே என்று செய்து முடித்து விட்டு  அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு வெளியில் வரும் போது இவர்களுக்கு விடுதலை கிடைக்கிறது இசை கலை இலக்கியம் என்று இவற்றில் ஈடுபடுகிறார்கள்  இவ்வகை பணிகளில் ஈடுபடும் போது தங்களுக்குள் உயிரியக்கத்தை காண்பார்கள் இது போதும் என்று கருதுவார்கள் கலை முதலிய படைப்புகள் இம்முறையில் தான் இவர்களால் படைக்கபடுகின்றன. உண்மையில் இவர்களும் அந்நியமாதல் என்ற சிக்கலுக்கான வரலாற்று சூழல் எது என்பதை புரிந்து கொள்வதில்லை . வேலை ஒரு புறம் இலக்கியம் இன்னொரு புறம் இப்படி இவற்றுக்குள் இவர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள் சமரசம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதும் ஒரு சிக்கல் தான்.

     இனி அந்நியமாதல் என்ற சிக்கல் தோன்றிய வரலாற்று சூழல் பற்றி சுருக்கமாக பார்க்கலாம் மார்க்ஸ் தரும் விளக்கத்திற்குள் தான் மீண்டும் செல்ல வேண்டியிருக்கிறது மிகமிக தொன்மைக் காலத்தில் காடுகளில் மனிதன் வேட்டையாடி இயற்கையில் கிடைபனவற்றை உண்டு ஒரு சிறு கூட்டமாக வாழ்ந்த காலம் என ஓன்று இருந்தது . இயற்கையில் கிடைத்தவற்றை வேட்டையில் கிடைத்தவற்றை பலரும் தமக்குள் பகிர்ந்து கொண்டனர் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வில்லை ஆண்டான் அடிமை இல்லை தொன்மை காலம் பற்றி இப்படிதான் நாம் ஒரு சித்திரம் வரைந்து கொள்ள வேண்டியிருக்கிறது .. இதன் பின்னர் தான் தனியுடமை குடும்பம் அரசு முதலியவை தோன்றின முன்னர் இயற்கை யோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றியிருந்த மனிதன் இப்பொழுது இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் தன்னிலிருந்தும் பிரிந்து பிளவுபட்டு அன்னியமானான் இப்படிதான் மார்க்ஸ் கூறுகிறார் . இயற்கையை ஒரு சிலர் வசப்படுத்திகொண்டார்கள் .அதாவது நிலத்தை காடுகளை ஒரு சிலர் வசப்படுத்தி கொள்ள மற்றவர்கள் இவர்களுக்கு அடிமைகள் ஆனார்கள் சமூகத்திற்குள் இப்படி ஏற்றதாழ்வுகள் தொடர்ந்து வளரும் போது சமூகம் தனக்குள் பிளவு படுகிறது கூட்டுணர்வு குலைகிறது மனிதன் தனியன் ஆகிறான். .சிலருடைய ஆதிக்கத்திற்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் சிலருக்கு சொத்து உரிமை, அரசதிகாரத்தில் ஒரு சிலர், உடைமையை அதிகாரத்தை சேகரிப்பதற்காக போர்கள், போட்டிகள்,பலரை அடிமைபடுத்தல், குடும்பம் என்ற வரையறைக்குள் பெண்ணை அடிமைபடுத்தல், சமூகத்திலிருந்து இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட மனிதனுக்கு நேர்வது அவலம், துயரம், முன்னைய சமூகத்திலிருந்த பாதுகாப்பு  ஒத்த உறவு, ஒத்த உணர்வு, அமைதி, இப்பொழுது இவனுக்கில்லை என்ன நேர்ந்தது என்பது இவனுக்கு தெரிவதில்லை. பல நூற்றாண்டுகள் அல்லது ஒரு சில ஆயிரம் வருடங்களுக்குள் இது நேர்ந்திருக்கிறது வரலாற்றுத் தொடர்ச்சி இவனுக்கு தெரியவில்லை. தனியுடைமை,அரசதிகாரம் ஆகியவை தான் தன் துயருக்கு காரணம் என்பது இவனுக்கு தெரியாது. வரலாற்று சூழல் தெரியாத நிலையில் அதற்குள் முற்றாக அகப்பட்டு கொண்டவன் இவன். எங்கெங்கோ தேடுகிறான் அலைகிறான் துயருக்கு காரணத்தை  தனக்குள்ளும் தேடுகிறான் . தன் ஆசை காரணமாக இருக்குமோ ?பெண் இன்பம் காரணமாக இருக்குமோ ? பிறப்பே இதற்கு காரணமாகுமோ? பிறப்பை தவிர்ப்பது எபபடி?? பெண்ணை தவிர்க்க வேண்டும் .ஆசைகளை துறக்க வேண்டும் துறக்க முடிவதில்லை. நான் எங்கிருந்து வந்தேன் . என்னை படைத்தவர் யார் ? எந்தக் காரணத்திற்காக படைத்தார்  ? துயரத்தை ஏன் கொடுத்தான் இப்படி தொடரும் துயருக்கு என் முன்வினை காரணமா? வினை எபபடி அறுபடும் ஆசைகளுக்கு புலன்கள்  காரணம் புலன்களை ஒடுக்க வேண்டும் . சமயங்கள் இப்படிதான் தோன்றுகின்றன .
   அந்நியமாதல் என்ற குறிப்பிட்ட வரலாற்று சூழலில் தான் சமயங்கள் ,கடவுள்,வினை,மோட்சம் ,நரகம்,முதலியவை தோன்றின .இதற்கான வரலாற்றை விளக்கியவர் மார்க்ஸ். வரலாற்றுக்கு வெளிச்சம் தந்தவர் மார்க்ஸ்.

    சமயங்கள் இலக்கியங்கள் கலைகள் ஆகியவை வரலாற்று சூழலில் தான்  தோன்றின.இந்த உண்மை அவர்களுக்கு அன்றைய சூழலில் புலப்படவில்லை என்றாலும் இவர்கள் தம் சூழலுக்கு எதிர்வினை என்ற முறையில் சமயம் , இலக்கியம், முதலியவற்றைப் படைக்கிறார்கள். அந்நியமாதல் என்ற சூழலில் இருந்து விடுபடாத நிலையிலும் இவர்கள் படைக்கிறார்கள்   உண்மையில் சமயவாதிகள், மெய்யியலாளர், கலைஞர் ஆகியவர் தமக்கு முன் உள்ள இயற்கையோடும் சமூகத்தோடும் பிரபஞ்சதோடும் இரண்டறக் கலந்து விட வேண்டுமென்ற பேராசையோடு தம்மளவில் உடைமைபற்று அதிகாரப்பற்று முதலிய எவையும் இல்லாமல் அதே சமயம் இயற்கை முதலியவற்றோடு தாம் இரண்டறக் கலக்கும் முயற்சியின் போதே அவற்றை உட்செரித்து  கொள்வதன் மூலம் அவற்றிலிருந்து ஆற்றலையும் மிக விரிந்த அளவிலான பார்வையையும் பேரழகையும் தாம் பெற்று தம் படைப்புகளை உருவாக்குகின்றனர். தம்மை இழந்து படைக்கின்றனர். வெளியில் இருப்பதாக சொல்லப்பட்ட  கடவுளரை தமக்குள் வயப்படுத்திகொள்கின்றனர் தமக்குள்ளும் சொர்கத்தை காண்கின்றனர். தமக்குள்ளும் கருணை வெள்ளமாய்  பெருகுவதை காண்கின்றனர். தொன்மை சமூகத்தின் ஏற்றத்தாழ்வற்ற பேருணர்வை தமக்குள் பெருகின்றனர். இந்தப் பேருணர்விலிருந்தே  தம் கால அறிவு சூழலுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒத்த முறையிலான படைப்புகளை தருகின்றனர் . அந்த பேருணர்வின் ஒரு சில கூறுகளேறும் இவர்கள் படைப்பில் இருக்கின்றன . அக்கால சூழலில் இவர்கள் அறிஞர்கள் மனித விடுதலையை நேசிப்பவர்கள் என்றெல்லாம் இன்றைய பார்வையிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும் இவர்களை எதிர் நிலையில் வைத்து  பார்க்கும் தவறை நாம் செய்ய கூடாது .ஆக்க முறையில் பார்க்க வேண்டும்.